தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மைக்காலமாக வெளியிடும் கருத்துக்கள் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர் என்ற சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது. முற்றிலும் பொறுப்பற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, புலிகள் இயக்கத்துக்கு பக்கச்சார்பாக சம்பந்தன் செயற்படுகிறாரென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முல்லைத்தீவில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தும், அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் கூறுவது எந்த வகையிலும் நியாயமற்றதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அவர் தெரிவித்த கூற்றுகளையிட்டுத் தாம் கவலையடைவதாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இதன் மூலம் சம்பந்தனின் செயற்பாடுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
சிவிலியன்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பது முற்றிலும் பொறுப்பற்ற ஒரு கூற்றாகும். சிவிலியன்களைப் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு இல்லாவிட்டால், எஞ்சியிருக்கும் பகுதியை படையினர் எப்போதோ கைப்பற்றியிருப்பார்கள்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயமொன்றை முதலில் அரசாங்கமே ஏற்படுத்தியது. நிலப்பரப்பு குறுகக் குறுக கடற் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தற்போது புலிகளுக்கு வெள்ளை யடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் புலிகளுக்காகக் குரல் எழுப்புகிறாரெனத் தயங்காமல் கூறமுடியும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம் போர் நிறுத்தமொனறை மேற்கொள்ளுமாக இருந்தால், புலிகளும் அதற்கு உடன்படுவார்கள் என்று சம்பந்தன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த காலங்களில் போர்நிறுத்தம் என்ற போர்வையில் புலிகள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை முழு உலகுமே அறியும். ஆனால், சம்பந்தன் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். உண்மையில் இது வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய விடயமாகும். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக புலிகள் இயக்கத்துக்காகக் குரல்கொடுத்து வந்துள்ளார். தற்போதும் அதனைச் செய்கின்றார் என்ற அமைச்சர்
அப்பாவி மக்களை எல். ரி. ரி. ஈயினர் சுடுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது என்கிறார். என்ன நடக்கிறது என்பது உலகறிந்த விடயமாக இருந்தாலும், சம்பந்தன் புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றார். இதிலிருந்து அவர் புலிகளுக்காக ஆஜராகின்றார் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார். சிவிலியன்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளுக்கும் கோரிக்கை விடுக்கும் தார்மீக கடமையும், பொறுப்பும் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. எனினும், அதனைச் செய்கிறார்கள் இல்லை. பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது. அதற்கு நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் மீளவும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.
வரலாற்றில் முதன் முறையாக 70% மக்கள் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை மீள உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்த அமைச்சர், சிவிலியன்களுக்காக 40 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விநியோகிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளார்க ளென்றும் தெரிவித்தார்.
வன்னியில் 3,50,000 சிவிலியன்கள் இருப்பதாக சம்பந்தன் கூறுகிறார். வேறு சிலர் 250,000 என்கிறார்கள். 1,30,000 என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். என்றாலும் சம்பந்தனின் கூற்று முற்றிலும் புலிகளுக்குப் பக்கச் சார்பானதாகும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
சிவிலியன்களின் வருகை மந்தமாகவில்லை. வேகமடைந்துள்ளது. என்றாலும் படையினர் தமது இலக்கை நோக்கி மிகவும் தந்திரோபாயமான முறையில் முன்னேறி வருகின்றனர். இது மிகவும் கடினமானது. சிவிலியன்களைப் புலிகள் விடுவித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும். புலிகளுடன் நேரடியாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்லவுடன் ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தசநாயக்க, விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ். எஸ். பீ. ரஞ்சித் குணசேகர உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றில் விடுமுறை பெற்று நாட்டுக்கு எதிரான நடவடிக்கை
அரசு கவலை தெரிவிக்கிறதென்கிறார் அமைச்சர் தினேஷ்
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத் திலிருந்து விடுமுறை பெற்றுக் கொண்டு நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையிட்டு அரசாங்கம் கவலை தெரிவிக்கின்றது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கத்தின் விடுமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் தினேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி. சொலமன் சிறில், சிவாஜிலிங்கம் எம். பிக்கான மூன்று மாத விடுமுறை கோரி பிரேணையை சமர்ப்பித்தார். அத்துடன் அதற்கான அனுமதியைச் சபையில் கோரினார்.
அவ்வேளையில், குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்குவது பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. எனினும் இத்தகைய விடுமுறையைப்பயன்படுத்தி நாட்டிற்கும் நாட்டின் இறைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதே கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்தார்.