“ஆப்கான் இராணுவமே நாட்டை பாதுகாக்காத போது அமெரிக்கா ஏன் ஆப்கானை காக்க வேண்டும்.” – ஜோபைடன் காட்டம் !

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள்  வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆப்கன் ஜனாதிபதி  அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியதாவது:

”ஆப்கனில் நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை. அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இறங்கின. படைகளை எப்போது வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஆப்கன் அரசும், படைகளும் தலிபான்களை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. அவர்களே எதிர்க்காதபோது அமெரிக்கா ஏன் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டைக் காக்காதபோது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்குக் கிடையாது.

ஆப்கனில் நடக்கும் விஷயங்களைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்  தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *