பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்புவழங்கப்படுகிறது. உங்களது வழக்கமான வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகின், ”மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களைப் பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களது தலைமை காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாலிபான்கள் தங்களது ஆட்சியில் பழைய இஸ்லாமிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தலிபான்கள் 90-களில் அமுல்படுத்திய கடுமையான சட்டங்களை மீண்டும் கடைப்பிடிப்பார்களா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
10 வயதுக்குமேல் பெண் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் முகம் மற்றும் உடலை முழுவதுமாக மூடும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், திருடக் கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுதல், பிரம்படி கொடுத்தால் உள்ளிட்ட பல இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.