வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள நோயாளர்களைக் கவனிப்பதற்காக தாதியர் குழுவொன்று இன்று வன்னிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பொது வைத்திய தாதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவர்கள் வன்னியிலுள்ள நலன்புரி நிலையங்களில் பணி புரிவதற்கென தன்னிச்சையாக முன்வந்துள்ளதாக மேற்படி சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார். முதற்கட்டமாக இன்று 20 தாதியர் வன்னிக்குச் செல்வதுடன் மேலும் 20 பேர் அடுத்த வாரம் வன்னிக்குச் செல்ல தயாராயுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.
இத்தாதியர் குழுவில் மனோதத்துவ ஆலோசகர்களும் இடம்பெறுவதுடன் தொடர்ச்சியாக மேலும் பல தாதியர்களை வன்னிக்கு அனுப்ப சங்கம் தீர்மானித்துள்ள தாகவும் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.