வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களால் வவுனியா பாடசாலைகள் நிரம்பி வழிவதால் மாணவர்களுக்கான கல்வியை தற்காலிக கொட்டகைகளிலும் மரநிழல்களிலும் நடத்துமாறு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வீ.ஆர்.ஏ. ஒஸ்வேல்ட் பணித்துள்ளார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வவுனியாவில் எட்டுப் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேசிய மட்டப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள க.பொ.த. உயர்தர, சாதாரண தர மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தினமும் வகுப்புகளை நடத்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் அவர் சுற்றறிக்கை மூலம் சகல பாடசாலை அதிபர்களையும் பணித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் தற்போது வவுனியாவில் தமிழ் மகாவித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா இந்துக் கல்லூரி, செட்டிகுளம் மகாவித்தியாலயம், பூந்தோட்டம் அ.த.க. பாடசாலை, நெளுக்குளம் கலைமகள் வித்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.