குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அஸ்ட்ரா செனகா தடுப்பூசி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் பொதுமுகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையின் விடுதலையின் பின்பு ஊடகங்களிடம் பேசிய அவர்,
வாழ்க்கையில் முதல்தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் ,நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன். வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச் சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன.
நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின் உரிய காரணம் இன்றி என்னை இழுத்துச் சென்றனர். பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,
இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச்சென்றார்கள். ரிசாட் பதியுதீன் எனக்கு இந்த ரீசேர்ட்டை தந்தார், பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார்,
சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்.
இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.