இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான “டெல்டா” மீண்டும் உருமாற்றம் அடைந்து, “டெல்டா ப்ளஸ்”-ஆக மாறியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற உருமாறிய கொரோனா, மிக வேகமாக பரவக் கூடியதாகவும், மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் அமைந்தது. டெல்டா என பெயர் வைக்கப்பட்ட இந்த வைரஸ், இந்தியாவில் ஏராளமான உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.
தற்போது, இந்த டெல்டா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானி வினோத் ஸ்கேரியா தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். B.1.617.2.1 என வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த வகை வைரசிற்கு டெல்டா ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. வைரசின் புரதத்தில் இந்த உருமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வகை வைரஸ் மோனோகுளோனல் ஆண்டிபாடி சிகிச்சைக்கு எதிராக செயலாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.