ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் அரசியல் கூட்டமொன்றில் இருக்கும்போது ஐ. நா. செயலாளர் நாயகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி கூறினார். அப்பாவி தமிழ் மக்கள் முல்லைத்தீவில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மனிதாபிமான அடிப்படையில் மீட்டெடுப்பதே எமது குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச் செயலாளரிடம் தெரிவித்ததாக ஜனாதிபதியே அங்கு கூறினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் பொழுதே ஐ. நா. செயலாளரிடம் இருந்து அவசர தொலைபேசி அழைப்பு வந்ததும் தமது உரையை இடையில் நிறுத்திக் கொண்டு தொலைபேசியில் ஜனாதிபதி அவருடன் பேசினார். முல்லைத்தீவில் இப்பொழுது புலிகளின் பிடியில் சிக்கி இருக்கும் அப்பாவி தமிழ் மக்கள் பற்றி ஐ. நா. செயலாளர் பான்கீ மூன் பிரஸ்தாபித்த பொழுதே ஜனாதிபதி மேற்கண்ட தகவலை அவரிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
எந்த வகையிலும் படையினர் முல்லைத்தீவில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கவில்லை எனவும் அரசாங்கம் விடுக்கும் எத்தகைய மனிதாபிமான ஆலோசனைகளையும் புலிகள் தட்டிக் கழித்து வருவதாலேயே இவ்வித சொல்லொண்ணா கஷ்டங்களை பொதுமக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்ற விபரத்தையும் தாம் ஐ. நா. செயலாளரிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி மேலும் அங்கு தெரிவித்தார்.
14 வயதுச் சிறுமியை வெடிகுண்டுகளால் அலங்கரித்து இராணுவ வீரர்கள் முன்பாக அனுப்பி தற்கொலையை உண்டு பண்ணிய புலிகளின் சம்பவம் பற்றியும் ஜனாதிபதி மேலும் அங்கு தெரிவித்தார். எந்த வகையிலும் வடக்கில் வாழும் தமிழ்மக்களுக்கு எவ்வித துன்பங்களையும் தொல்லைகளையும் படையினர் உண்டு பண்ணவில்லை எனவும் ஐ. நா. செயலாளரிடம் தெரிவித்த ஜனாதிபதி, புலிகளிடம் இருந்து அப்பாவி மக்களை மீட்பதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்ததாக ஜனாதிபதி மேலும் சொன்னார்.