விசுவமடு, சாலை பிரதேசங்கள் படையினரின் பூரண கட்டுப்பாட்டில்

_army.jpgமுல்லைத் தீவில் புலிகளின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக விளங்கிய விசுவமடு மற்றும் சாலை பிரதேசங்கள் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

சாலை பிரதேசம் பூரணமாக கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகள் வசம் இருந்த இறுதி கடற்புலித் தளமும் பாதுகாப்புப் படையினரால் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு முழுவதையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், விசுவமடு மற்றும் சாலை ஆகிய பிரதேசங்களை முழுமையாக தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கிருந்து முன்னேறிவருவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையணியினர் சாலை பிரதேசத்தை விடுவித்துள்ளனர்.

விசுவமடு நகருக்குள் பிரவேசித்த 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையணியினரும், இராணுவத்தின் 57வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் இராணுவத்தின் மூன்றாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சத்தியபிரிய லியணகே தலைமையிலான படைப்பிரிவுகளும் விசுவமடு முழுவதையும் புலிகளின் பிடியிலிருந்து நேற்று முழுமையாக விடுவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விசுவமடு, சாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் வடக்கு, கிழக்கு கரையோரம் முழுவதும் தற்பொழுது படையினரால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். படையினர், பொது மக்களுக்காக அறிவித்த பாதுகாப்பு வலயத்தையும், புலிகளிடம் எஞ்சியுள்ள புதுகுடியிருப்பு பிரதேசத்தையும் மிகவும் அண்மித்துள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

வடகிழக்கு மற்றும் கிழக்கு கரையோர பிரதேசங்களில் சுண்டிக்குளம், கட்டைக்காடு, தாளையடி, செம்பியன் பற்று, செம்மலை மற்றும் அலம்பில் ஆகிய பிரதேசங் களில் அமைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் பல்வேறு முக்கிய கடற் புலி முகாம்களை கைப்பற்றிய படையினர் கடற்புலிகளின் மிகவும் பிரதான கடற்புலி முகாமாக விளங்கியசாலை கடற்புலிமுகாமை கைப்பற்றி கடற்புலி நடவடிக்கைகளுக்கு முற்றுகையிட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்தில் அமைந்திருந்த இறுதியானதும், மிகப் பெரியதுமான முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்ததாக பிரிகேடியர் கூறினார். ஏ-35 பிரதான வீதிக்கு வடக்கே தராவிக்குளத்திற்கும் அண்மித்த பகுதியில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய முகாம் ஒன்றும், சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரபில் அமைக் கப்பட்டிருந்த மயானம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த மயானத்தில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் நம்புவதாகவும் அவர் குறுப்பிட்டார்.

டயர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட இரண்டு கொள்கலன்கள், 5 லீட்டர் கலன், கெல்டெக்ஸ் ரக ஒயில் நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
இதுதவிர பெருந்தொகையான வாகன உதிரிப்பாகங்களைக் கொண்ட பாரிய பிரதேசம் ஒன்றையும், பெருந்தொகையான உதிரிப்பாகங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர். கடந்த ஒரு வார காலத்திற்குள் பாதுகாப்புப் படையினர் புலிகளை இலக்கு வைத்து நடத்திய கடுமையான தாக்குதல்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *