“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” – அனுரகுமார திஸாநாயக்க

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விவகாரத்தை சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் செயற்பாடாகக் கருதாது எமது பிரஜைகள் மீதான அக்கறையில் உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் 2009ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து பல்வேறு விடயங்களைச்  சுட்டிக்காட்டியிருந்தது.

அத்தோடு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா?, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போன்ற உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.

நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொது ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் எனவும், சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு சகல மக்களுக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீண்டகாலமாக நாம் கோரி வருகின்றோம்.

தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என நம்ப முடியாது. அதேபோல் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறிவிட முடியாது.

ஒரு சிலர் அல்லது அரசு செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் உள்ளது.” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *