“ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்” – சுமந்திரன் எச்சரிக்கை !

“ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் பலத்த விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

சண்டே டைம்சிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

நாங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக்கையில் காணப்படுவதை பலர் அவதானித்திருப்பார்கள். இது ஒரு தற்செயல்நிகழ்வு.

கடந்தகாலங்களில் மூன்று தடவை ஐ.நாபொறிமுறைக்கு அரசாங்கம் இணங்கியபோதிலும் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையே அரசாங்கத்தின் தற்போதைய நிலைக்கு காரணம்.

ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதன் பின்னர் அதற்கான இயல்பான விளைவுகள் உருவாகும். யுத்தகால பொறுப்புக்கூறும் பொறிமுறையை பொறுத்தவரைஐக்கியநாடுகள் தீர்மானத்தின் மூலம் இலங்கை கலப்புபொறிமுறைக்கு சம்மதம் வெளியிட்டது . எனினும் பின்னர் முன்னர் ஏற்றுக்கொண்டபடி அவ்வாறான பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்தது.

கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் ஐ.நா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அறிவித்தது.
இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட நாட்டின் சம்மதம் அவசியம். நாடு தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐ.நா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல், பயண போக்குவரத்து தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் சமீபத்திய பேட்டிகளை பார்க்கும்போது பத்து வருடத்தின் பின்னரும் அரசாங்கம் மறுக்கும் மனோநிலையிலேயே உள்ளதை புலப்படுத்துகின்றது.

யுத்தகால பொறுப்புக்கூறலிற்கு இலங்கைக்கு பத்து வருடங்கள் வழங்கப்பட்ட பின்னரும் அது நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டியுள்ளது” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *