“நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” – சி.வி. விக்னேஸ்வரன்

“இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அண்மையில் ஊடக சந்திப்பொன்றின் போது அமைச்சர் சரத்வீரசேகர குறிப்பிட்டிருந்த கருத்து தொடர்பாக பேசிய சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி தொடர்பாக தன்னுடைய அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். எனினும் அது சமூக ஊடகங்களில் வேறு விதமாக பொருள் கொ்ளப்பட்டது எனக்குறிப்பிட்டு பேசுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில் …

இராணுவப் பயிற்சி பற்றிக் கூறிய விடயங்கள் பத்திரிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றே கூறினேன்.
என்னைப் போன்றவர்கள் எவ்வாறு எங்கள் கல்லூரிகளில் கல்லூரியை விட்டு விலக முன்னர் போர்ப் பயிற்சி நெறிகளில் பாண்டித்தியம் பெற்றோமோ ? அதே போன்று கல்லூரிகளில் இருக்கும் போதே எமது மாணவ மாணவியர் பயிற்சி பெற வேண்டும் என்றே கூறினேன்.

அவர்களுக்குப் பயிற்சி யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி அப்போது எழுந்தது. முழுமையாகத் தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழர்கள் இராணுவத்தில் இருந்தால் அவர்கள் தமிழில் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் முன்னாள் போராளிகள் பயிற்சி அளிக்கலாம். இல்லை என்றால் தமிழ் நாட்டில் இருந்து வருவித்து அவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளேன். சிங்களவர்களோ சிங்கள மொழியிலோ பயிற்சிகள் அளிக்கக் கூடாது என்றும் கூறினேன்.

அமைச்சர் கூறியது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றி. அவர்கள் அநேகமாகக் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆனால் அதற்குப் பதிலாக கல்லூரியில் பயிலும் 16 வயதுடையோருக்கு கல்லூரியிலேயே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன். இதனைப் புரியாமல் நான் எம் இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறியுள்ளேன் என்பது அபத்தம். கல்லூரியில் போர்ப் பயிற்சி பெற்றமையின் நன்மைகளைப் புரிந்தே நான் அவ்வாறு கூறினேன். இன்றைய இளைஞர் யுவதிகளை ஒழுக்க சீலர்களாக மாற்றக் கூடியது இப் பயிற்சி” என குறிப்பிட்டுள்ளார் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *