“டொனால்ட் டிரம்ப் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது” – ஜோபைடன்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஜோ பைடனுக்கு ஆதரவாகவே உள்ளன.
இந்நிலையில் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற இறுதிக்கட்ட வாகன பிரச்சாரத்தின்போது பேசிய ஜோ பிடன், கடந்த நான்கு ஆண்டுகளில் டிரம்ப் தேசத்தை பிளவுபடுத்தி தோல்வி அடைந்துள்ளதாகவும், அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற அமெரிக்கர்கள் ஓட்டு போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘இந்த தேசத்தை பிளவுபடுத்திய ஜனாதிபதியின் பதவிக்கு நம்மால் மூன்று நாட்களில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். மூன்று நாட்களில், இந்த தேசத்தைப் பாதுகாக்கத் தவறிய ஜனாதிபதி பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மூன்று நாட்களில், இந்த நாடு முழுவதும் வெறுப்பின் தீப்பிழம்புகளைத் தூண்டிய ஒரு ஜனாதிபதி பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் மில்லியன் கணக்கானவர்கள் வாக்களிப்பார்கள். இந்த நாட்டை மாற்றும் சக்தி உங்கள் கைகளில் உள்ளது. டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்வது பற்றி எனக்கு கவலையில்லை. இதன்மூலம் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க முடியாது. டொனால்ட் டிரம்ப் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம் இது’ என்றும் ஜோ பிடன் பேசினார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *