பாகிஸ்தானில் மத பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மேலுமு் தெரியவருவதாவது,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் என்ற மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மத கருத்துக்களை கற்றுகொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மத கல்வி கற்று வந்தனர்.
![At least 7 killed, 70 injured in blast at seminary in Peshawar's Dir Colony: Pakistan Media || பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி](https://img.dailythanthi.com/Articles/2020/Oct/202010271140157935_At-least-7-killed-70-injured-in-blast-at-seminary-in_SECVPF.gif)
இந்நிலையில், அந்த மதபாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மதகல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தன சிறுவர்கள் மசூதி கட்டிடத்தை விட்டு வெளியே தப்பியோடினர். ஆனாலும், இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.