“கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளது“ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை அடையாளம் கண்டு, நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று நோயாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர். பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அத்தோடு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றுக்கு உறுதியானோருடன் பழகியவர்களை அவர்களுக்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தொடர்பாக ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதனாலேயே தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆகவே மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *