“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது“ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

“2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது“ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது எனினும் அது வர்த்தக நோக்கில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 4 ராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,

பயங்கரவாதம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இதனால், துரித அபிவிருத்தியை செய்ய எமக்கு வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டன. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எமது நாடுகளுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல்களே நடந்தன. எனினும் சிலர் இதனை சீனாவுக்கு சார்பான நடவடிக்கையாக வர்ணித்தனர். இலங்கை சகல நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்கின்றது.

இலங்கை பூகோள ரீதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இதனால், எமது நாடு பல தரப்பினரை ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கை நடு நிலையான வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. நெருக்கமான பிரதிபலன்களுடன் கூடிய அபிவிருத்திக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். இலங்கை வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் திறக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான பிராந்தியமாக இருக்க வேண்டும். இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான பிராந்தியமாக மாற்ற வேண்டும் என இலங்கையையே 5 தசாப்தங்களுக்கு முன்னர் முதலில் யோசனை முன்வைத்தது. 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்க் ஹூன்ஜிங்க் இலங்கைக்கான தென் கொரிய தூதுவராகவும் ஹோல்கர் லோதர் சோய்பொயட், இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவராகவும் மொன்சிஞ்ஞோர் யுரந்தர பிரயன் உடய்வே, இலங்கைக்கான வத்திகான் தூதுவராகவும் டொமினிக் ஃபர்க்லர் இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *