இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவையும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்திக்கின்றார். தொடர்ந்து இன்று பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.
நான்கு நாட்கள் விஜயமாக நேற்று வியாழக்கிழமை மாலை 4.40 மணியளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் உட்பட இருபது பேர் கொண்ட குழுவினரும் அடங்குகின்றனர்.
நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஐம்பதினாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு அதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைப்பார். அத்துடன் யாழ்.நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தையும் அவர் திறந்து வைப்பார்.
மேலும், அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து பலவிடயங்கள் குறித்து கலந்துரையாவுள்ளார். இதில் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.