அரசாங்க ஆசிரியர் சேவையில் மேலும் ஒரு தொகுதியினரை மெளலவி ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்தப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் மொஹம்மத் தம்பி நேற்றுத் தெரிவித்தார். இந்த நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் 35 பேர் மெளலவி ஆசிரியர்களாக அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறினர்.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 120 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. 202 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 82 பேரை நியமிக்கத் திட்டமிடப்பட்டபோதும் வெட்டுப்புள்ளி அடிப்படையில் 35 பேரே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட உள்ளது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களித்திருந்த படி இந்த மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகவிருக்கும் இம்மாதத்தில் மெளலவி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சையும் நடைபெறுவதையிட்டு இந்நியமனத்துக்காக அரசியல் ரீதியாக போராடிய ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமாக் கட்சி மகிழ்வுறுவதோடு ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது என உலமாக் கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் கூறியுள்ளார்.