சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாணவர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர். இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.
“அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோரையும் மனம் உருகச் செய்தது.
இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நடவடிக்கை இடம்பெற்றன.