றுகுணு மாணவன் மரணம் தொடர்பான பொலிஸாரின் கருத்தை ஜே.வி.பி. நிராகரிப்பு

றுகுணு பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்த கருத்தை ஜே.வி.பி. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

ஜே.வி.பி.யின் மாணவரமைப்பின் உறுப்பினரொருவரால் தலையில் தாக்கப்பட்டு கடுமையான காயங்களின் விளைவாக வியாழன் இரவு றுகுணுப் பல்கலைக்கழக மாணவன் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஜே.வி.பி. உறுப்பினரும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி எம்.பி.யுமான அநுர குமாரதிஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது றுகுணு பல்கலைக்கழக மாணவன் ஜே.வி.பி. மாணவர் அமைப்பின் உறுப்பினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை அநுரகுமார நிராகரித்துள்ளார்.

சுசந்த அருண பண்டார என்ற 25 வயது மாணவனின் மரணம் தொடர்பாக பொலிஸாரின் அறிக்கைகள் இதுவரை முரண்பட்டவையாகக் காணப்பட்டதாக அநுரகுமார கூறியுள்ளார். அருண பண்டார இயற்கையாக மரணமெய்தியதாக முதலில் பொலிஸார் கூறியதாகவும் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் அநுரகுமார தெரிவித்திருக்கிறார். தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவன் பின்னர் இறந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரே தாக்கியதாக ஜே.வி.பி.யிடம் தொடர்புபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், மற்றொரு மாணவனே தனது மகனைத் தாக்கியதாக அந்த இறந்த மாணவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். அந்த மாணவனை அடையாளங்கண்டு கொண்டுள்ளதாகவும் அவர் ஜே.வி.பி. பணியாளர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஊவா பரணகமவைச் சேர்ந்த பஸநாயக்க என்பவரே அந்த மாணவரென அடையாளங்கண்டு கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் சனிக்கிழமை உத்தரவிட்டிருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *