கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பெண்ணொருவரின் முள்ளந்தண்டில் ஊடுருவிய துப்பாக்கிச் சன்னம் ஒன்று ஒரு வருடத்தின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் வைத்து கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற போரில் ஒரு துப்பாக்கிச் சன்னம் பெண்ணொருவரின் இடுப்பு முள்ளந்தண்டில் புகுந்து மிகுந்த வேதனையை எற்படுத்தி வந்தது.
கடந்த சனிக்கிழமை (July 03 2010) சாவகச்சேரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை மூலம் இத்துப்பாக்கிச் சன்னம் அகற்றப்பட்டுள்ளது. நாவற்குழி மறவன்புலவு என்ற இடத்தைச்சேர்ந்த எஸ்.கமலேஸ்வரி (வயத 26) என்ற பெண்ணின் உடலில் இருந்தே இத்துப்பாக்கிச் சன்னம் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது காயப்பட்டு உனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் உடல்களில் துப்பாக்கிச் சன்னங்கள், எறிகணைகளில் துண்டங்கள் என்பன இன்னமும் அகற்றப்படாமலுள்ளமை குறிப்பித்தக்கது.