கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனை வழங்கிய இலங்கையரொருவருக்கு டுபாயின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கியுள்ளது. தனது காதலியின் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஈசா ஷெரீப் மரணதண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.
இச் சம்பவத்தில் பலியானவரும் இலங்கையராவார். நீதிமன்றம் ஏப்ரல் 5இல் பிரதிவாதிக்கு ஆயுள்தண்டனை வழங்கியதுடன் அதன்பின்னர் அவரை நாடுகடத்தும் தீர்ப்பையும் வழங்கியிருந்தது. பிரதிவாதி இறந்தவரின் மனைவியுடன் தொடர்பு கொண்டு இருந்ததாகவும் அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டிருந்ததாகவும் நம்பப்பட்டது. கணவன் அவரின் காதல் வாழ்வுக்குத் தடையாக இருந்ததால் அவரைக் கொல்ல திட்டமிட்டிருந்ததாக நம்பப்பட்டது. கடந்த வருடம் பெப்ரவரி 26 இரவு அவரை பல தடவைகள் குத்தியதாகவும் உடலின் பலபகுதிகளில் காயமேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் அன்றைய இரவு இரத்தவெள்ளத்தில் காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரி விசாரணையாளர்களுக்கு கூறியுள்ளார். அச்சமயம் அங்கிருந்த மனைவியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தனது கணவனை ஆபிரிக்க மனிதர் ஒருவர் குத்தியதாக அப்பெண் கூறியுள்ளார். வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது வழியில் குத்தியதாக அப்பெண் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் உடனடியாகவே தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டதாகவும் பிரதிவாதி தனது கணவரைக் குத்தியதாகவும் பின்னர் அவர் தெரிவித்துள்ளார். பிரதி வாதி தான் வேலை செய்யும் இடத்தில் தொழில் பார்ப்பவர் என்றும் அப்பெண் கூறியிருந்தார். குத்தியதற்குக் காரணம் பொறாமை என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பிரதிவாதியை பொலிஸார் கைது செய்தனர்.
இந்தக் குற்றச்செயல் நடந்த இடத்தில் அன்றைய இரவு இருந்த டக்ஸி சாரதி கூறுகையில்; அல்யாப்ரியா பகுதிக்கு ஆட்களை தான் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இரண்டு ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் பெண்ணொருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்ததையும் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்களிலொருவர் மற்றவரை அவர் கீழே விழும் வரை குத்தினார். மற்றவர் மார்பில் குத்திக் கொண்டிருந்தார் என்று சாரதி தனது சாட்சியத்தின் போது தெரிவித்ததாக கலீஜ் ரைம்ஸ் தெரிவித்தது.