பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதற்கு ஹெல உறுமய கடும் எதிர்ப்பு

முன்னாள் இராணுவத்தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதையோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையோ ஹெல உறுமய ஆதரிக்கவில்லையெனவும் ஆனால் அவர் அரசியல் பிரவேசம் செய்து ஆசி வேண்டி எம்மிடம் வந்தால் அவருக்கு நல்ல ஆலோசனை வழங்கி பிரித்நூல் கட்டுவதற்கு தயங்கமாட்டோம் என்று ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான உடவத்தே நந்ததேரோ நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களான உடவத்தே நந்ததேரோ, அக்மீமன தயாரத்ன தேரோ, அளவ்வை நந்தாலோக்க தேரோ, அப்பரெக்க புன்னானந்த தேரோ, உடுவே தம்மாலோக்க தேரோ ஆகிய ஐந்து பேரும் செய்தியாளர் மாநாட்டை நடத்தினர் . ஜெனரல் சரத்பொன்சேகாவை தேசத்தை காத்த வீரராகவே நாம் மதிக்கின்றோம். அவரைத் தேசிய வீரராகவே நாட்டுமக்கள் மதிக்கின்றனர். ஆனால் அவர் சில தீய சக்திகளின் வலையில் சிக்கி தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளப்போகிறார். ஜெனரல் சரத்பொன்சேகா ஒரு சிறந்த இராணுவீரர். அவருக்கு யுத்த உபாயம் நன்கு தெரியும். ஆனால் அவரால் நாட்டை ஆளக்கூடிய தகைமை கிடையாது. நாட்டை ஆள்பவருக்கு பொறுமை மிக அவசியம். அந்தப் பொறுமை அவரிடம் கிடையாது. சர்வதேச சதிகாரர்களின் உள்ளூர் முகவர்களுடன் சேர்ந்து நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் நோக்கத்துடன் அரசியலுக்கு வரும் ஜெனரல் பொன்சேகாவை நாம் எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாது எனவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *