சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. ‘கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இவ்விருதுக்கு இந்த ஆண்டு நிறைய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஓராண்டு காலம் (2008ம் ஆண்டு ஆகஸ்டு 13 ந் திகதி முதல் 2009 ம் ஆண்டு ஆகஸ்டு 24 ந் திகதி வரை) வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானவர்கள் கருத்தில் கொள்ளப்பட்டனர்.
இதன் பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 6 வது ஐ. சி. சி. விருதுகளை பெறும் வீரர்கள் யார் – யார்? என்ற விவரம் நேற்று முன்தினமிரவு ஜோகனஸ்பர்க்கில் நடந்த கோலாகலமான விழாவில் அறிவிக்கப்பட்டன.
இதன்படி ஆண்டின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான விருதை இலங்கை அணி டில்ஷான் பெற்றார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் மே. தீவுக்கு எதிராக 57 பந்துகளில் 96 ஓட்டங்கள் விளாசியது அவருக்கு இந்த விருதை பெற்றுத்தந்தது. வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு அவுஸ்திரேலியாவின் 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் பீட்டல் சிடில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சிடில் 12 டெஸ்ட் ஆடி 49 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தலைசிறந்த வீரருக்கான ஐ. சி. சி. விருதுக்கு இந்திய வீரர்கள் டோனியும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு கவுதம் காம்பீரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மேலும் விளையாட்டு உணர்வுடன் ஆடியதற்கான உத்வேக அணிக்கான விருதுக்கு நியூசிலாந்து அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.