வவுனியா நிவாரணக் கிராமங்களில் வெள்ளம் வடிந்தோடி வருவதால் நிலைமை வழமைக்குத் திரும்பி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
கூடாரங்களுக்குள் வெள்ளம் வந்தமையால் வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த 400 பேரும், நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து அவர்களுடைய கூடாரங்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் வவுனியாவில் ஓரளவு மழை பெய்ததை தொடர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 400 பேர் உடனடியாக வேறொரு பாதுகாப்பான இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
வவுனியாவில் நேற்று முதல் நிலைமை ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ளது. இதேவேளை, யு.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனெப்ஸ் ஆகிய தன்னார்வு தொண்டு அமைப்புகள் ஏற்கனவே தாம் பொறுப்பு எடுத்துக்கொண்ட வகையில் கவழி நீர்கான் தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமும் மழைநீர் தேங்குவதற்கு காரணமாகவிருந்தமையினால் அதனை நிறைவேற்றுவதற்கான வேலைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறித்த நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் பாரிய மழை பெய்யுமாயின் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர்க்கு மாற்று வசதிகளை செய்வது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது மழையின் காரணமாக கூடாரங்கள், மலசலகூடங்கள் மற்றும் சமையல் நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர், வலயங்களுக்குப் பொறுப்பான தளபதிகள், முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.