தாய் லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பு மீண்டும் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது.
அதற்கேற்ப ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உலக பொருளாதார மற்றும் சமூக சங்கத்தின் தகவல் தொழில் நுட்ப குழுவுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஏனைய நாடுகளின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் பிரகாரம் லலித் வீரத்துங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் தொடர்பான கொள்கையாக்கங்களில் தகவல் தொடர்பாடல் உத்தி முறைகளை உள்வாங்கிக் கொள்தல், பிராந்திய அடிப்படையில் கணினி விண்ணப்பங்களைப் பயன்படுத்தல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மனிதவளத்தைக் கட்டியெழுப்புதல், அனர்த்த முகாமைத்துவம் போன்றவற்றில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்தல் என்பனவற்றில் கூட்டாகச் செயற்படுதல் என்பன இக்குழுவின் நோக்கமாகும்.
கடந்த ஆண்டும் அங்கத்துவ நாடுகளின் ஏகோபித்த அபிப்பிராயத்தின்படி இக்குழுவுக்கான தலைமைத்துவப் பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்தது. இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்குக் கிடைத்த கெளரவமாக இது அமைகின்றது.
இலங்கை கடந்த காலங்களில் காட்டிய அடைவுகள் இப்பதவி இலங்கைக்குக் கிடைத்தமைக்கான காரணமாகும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். இதன் உறுப்புரிமை நாடு என்றவகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை முக்கியமான கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். சில ஆண்டுகளாக மஹிந்த சிந்தனை திட்டத்தில் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மிகவும் அக்கறையாக அவதானித்து வருகின்றன.
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இலங்கையில் பல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கான ஒரு சர்வதேச அங்கீகாரமாக லலித் வீரதுங்கவின் நியமனம் கருதப்படுகின்றது.