அம்பாறை மத்திய முகாம் 4 ஆம் கொலனி பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை பிற்பகல் பாடசாலைச் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
4 ஆம் கொலனியில் வசிக்கும், வேப்பையடி வாணி வித்தியாலய 7 ஆம் தர மாணவியான மோகன் மதுனுஷியா (வயது 12) என்ற சிறுமியே இந்தப் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது;
பிற்பகல் 2 மணியளவில் இந்த மாணவி தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
மாலை 6 மணியளவில் அந்தப் பகுதியில் வீதியோர மதகொன்றின் கீழ் கிடந்த இவரை கண்டவர்கள் உடனடியாக அவரை மத்திய முகாம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குற்றுயிராகக் கிடந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துவிட்டார். இவரது கழுத்திலும் வயிற்றுப்பகுதியிலும் ஆழமான கத்திக் குத்துக் காயங்களும் காணப்பட்டன.
இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குரிய உபகரணங்கள் இல்லாததால் உடல் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
இவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்ன கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தெரியவரவே பொதுமக்கள் கடும் சினமடைந்ததுடன் இதற்கு காரணமானவனெனக் கூறப்படும் “ரவுடி பாவா’ (கிருஷ்ணகுமார்35 வயது) என்பவரை தேடத் தொடங்கினர்.
மாணவியின் படுகொலையை அடுத்து அவர் கல்விகற்ற பாடசாலையும் நேற்று மூட்பட்டிருந்தது.
நேற்றுக் காலை சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்த மத்திய முகாம் பொலிஸார் பிரதான குற்றவாளியெனச் சந்தேகிக்கப்பட்ட ரவுடி பாவாவைத் தீவிரமாகத் தேடினர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் 4 ஆம் கொலனி வயல் பகுதியில் ரவுடி பாவா மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு திரண்டு சென்ற மக்கள் அவனை மடக்கிப் பிடித்ததுடன் அவனை மிகக் கடுமையாகத் தாக்கிய பின் மத்திய முகாம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.