ஒசாமா பின்லாடனின் மகன்களில் ஒருவரான சாத், அமெரிக்க விமான தாக்குதலில் பலியானார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான கூறப்படும் ஒசாமா பின்லாடன், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் உள்ள மலைப் பகுதிகளில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் எல்லையில், அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன. கடந்த ஓராண்டில் 50க்கும் அதிகமான தாக்குதல்களில், 470 பேர் பலியாகியுள்ளனர்.
இது போன்று அமெரிக்க விமானம் குண்டு வீசிய போது, அந்த வழியாக எதேச்சையாக வந்த ஒசாமாவின் மகன் சாத், குண்டு வீச்சில் சிக்கி பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக, அமெரிக்க வானொலி தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த சாத் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தனது தந்தை ஒசாமாவை பார்க்க வந்த போது குண்டு வீச்சில் சிக்கி பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஒசாமாவின் மகனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றும் அவரை கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் குண்டு வீச்சில் தற்செயலாக அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. சாத் கொல்லப்பட்ட பகுதி அருகே தான் ஒசாமா பதுங்கி இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக அமெரிக்க அதிகாரிகள சந்தேகிக்கின்றனர்