வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான ஆத்மசாந்தி லோக மோட்ச வழிபாட்டு நிகழ்வு ஆடி அமாவாசை தினத்தில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டை இந்து அமைப்புகளின் ஒன்றியம் செய்திருப்பதாக அமைப்பின் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
யோகமோட்ச நிகழ்வுக் கிரியைகளை கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுரு இராஜ இராஜ ஸ்ரீ.க.நகுலேஸ்வரக்குருக்களும் மாவைக் கந்தன் ஆலய ஆதீன கர்த்தா மகாராஜ ஸ்ரீ சண்முகநாதக் குருக்களும் இணைந்து நடத்தி வைப்பார்கள். இந்நிகழ்வையொட்டி அடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து அமைப்புகளின் ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்களில் தங்கி வாழும் வன்னி அகதிகளின் உறவுகளான 127 பேரின் பெயர்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கான மரணக்கிரியைகள் கூட உறவுகளால் செய்யப்படவில்லை. சகல மக்களையும் இவ் ஆத்மசாந்தி வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறும் ஆடி அமாவாசை புனித நாளில் அவர்களுக்கான பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது