அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக எகிப்துக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் கடாபி க்குமிடையில் நேற்றுக் காலையில் விசேட நல்லெண்ண சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு தொடர்பாகவும் அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும், இரு நாட்டுத் தலைவர்களும் விசேட கவனம் செலுத்தினர்.
அதேநேரம், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அண்மையில் லிபியாவுக்கு மேற்கொண்டிருந்த ராஜதந்திர விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக லிபியத் தலைவருக்கு எடுத்துக் கூறினார்.
பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருக்குத் தெளிவுபடுத்தினார்.
இலங்கைக்குக் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பெரும் தலையிடியாக இருந்து வந்த பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடித்தமைக்காக லிபியத் தலைவர் கடாபி இலங்கை ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கட்டியெழுப்பப்படுகின்ற புதிய இலங்கையுடனான நட்புறவை நிலைநிறுத்தி, மேம்படுத்திக்கொள்வதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் லிபியத் தலைவர் கடாபி அச்சமயம் தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாடு நடைபெறும் எகிப்தின் ஷாம் அல் ஷெய்க் நகரில் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடை யிலான இச்சந்திப்பு நடைபெற்றது.