அம்பாறை மாவட்டத்தில் கடந்தகால யுத்த சூழ்நிலை மற்றும் கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. “கிழக்கு உதயம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதியுதவியுடன் சம்மாந்துறை, உகனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களிலே இவ்வாறான ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதற்கட்டமாக உபயோகமில்லாது காணப்படும் கட்டிடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இதற்கு மேலதிகமாக புதிய கட்டிடங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.
மேலும், ஆலையடிவேம்பு, அம்பாறை மற்றும் மருதமுனை போன்ற இடங்களில் கைத்தறி நெசவுத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொரு நிலையத்திலும் தலா 100 யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி பின்னர் அந்த நிலையங்களிலே தொழில்வாய்ப்பினை வழங்கவும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.