முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் பிரதேசங்களுக்கு நேற்று முதல் மின்சாரம்

basil-raja.jpgவடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று (15) மின்சார வசதி அளிக்கப்பட்டது. வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பெசில் ராஜபக்ஷ மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டி. ஜே. செனவிரத்தினவின் ஆலோசனையின் பிரகாரம் இப்பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் 180 நாட்களுக்குள் வடபகுதியிலுள்ள பல இடங்களுக்கு துரிதமாக மின்சார வசதி அளிக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ். நகரங்களில் உப மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்தப் பணிகள் 2 1/2 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. மாங்குளத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது.

இது தவிர வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை மின்சார இணைப்புத் தொகுதி யொன்று நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வருடங்களுக்குள் வடக்கில் உள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் மேற்படி திட்டங்களுக்கு 6000 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மோதல் காரணமாக வட பகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு நீண்டகாலமாக மின்சார வசதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மோதல்களின் போது புலிகள் மின்மாற்றிகள், உப மின்நிலையங்கள் என் பவற்றை அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *