பொய்யான தகவல்களை கூறி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விபரங்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸ் தலைமையக த்திற்கு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுக்கின்றது.
அமைச்சர்களின் உறவினர்கள் என்று பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு சட்டவிரோத மண் அகழ்வு, மரம் வெட்டுதல், மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு சட்டவிரோதமாக நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கட்டுப்படுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய பொலிஸ் தலைமையகம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் நலனை கருத்திற் கொண்டு பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல்களை வழங்குபவர்களின் விபரங்கள் மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.