புலிகளுக்கு பெருமளவு மருந்துப் பொருட்களை வழங்கியதாக நம்பம்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கொழும்பு, வெள்ளவத்த பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.
வெள்ளவத்த, பெரேரா ஒழுங்கை எனும் முகவரியில் இயங்கி வரும் நீலம் மருந்தகத்தின் உரிமையாளரான செல்வநாயகம் பாலசந்திரன் எனும் இந்த சந்தேக நபரை பயங்கரவாத புலணாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர்.
45 வயதான இவர் பதிவு செய்யப்பட்டுள்ள தமது மருந்தகத்தினூடாக பல மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை புலிகளுக்கு வழங்கியுள்ளதோடு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களிடமிருந்தும் பெருமளவு மருந்துகளைக் கொள்வனவு செய்து புலிகளுக்கு விநியோகித்திருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் கைது செய்யப்படும்போது புலிகளுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 32 வகையான மருந்துப் பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.புலிகளது மருத்துவப் பிரிவின் முக்கிய ஆதரவாளராக நம்பப்படும் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.