சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுண்டு. ஆனாலும் நாம் யாரிடமும் நிதி கேட்டு பிச்சையெடுக்கவோ கெஞ்சவோ மாட்டோம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பிச்சைப் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு எந்த நாட்டிடமும், எந்த நிதியத்திடமும் போய் பணம் கொடுங்கள் என நாங்கள் கெஞ்ச மாட்டோம். சொந்தக் காலில் நிற்கும் தகுதி எங்களுக்கு உண்டு. பங்குச் சந்தைகள் மூலம் பணம் திரட்டிக் கொள்ளும் வாய்ப்புகளும் எங்களிடம் அதிகமாகவே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நிதியத்தின் நிதியுதவி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்து வந்துள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தேவையானதை செய்ய எங்களிடம் போதுமான நிதி உள்ளது. மேலும் பல தரப்பிடமிருந்து நிதி வந்து கொண்டுள்ளது. எனவே, பிரச்சினை இல்லை. உண்மையைச் சொல்வதாக இருந்தால் சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கண்டிப்பாக தேவை என்ற கட்டாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எங்களுக்கு அந்த நிதியுதவி தேவையில்லை என்று நான் கூற மாட்டேன். அதே சமயம், யாரிடமும் போய் நாங்கள் பிச்சை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.