தேர்தலை எதிர்கொள்ள 120 நாள் பிரசாரத் திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுக்கும்

election_ballot_.jpgஅர சாங்கம் எந்நேரத்தில் எத்தேர்தலை நடத்துமெனத் தெரியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு 120 நாள் பிரசார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

சுமுகமான சூழ்நிலையில்லாத நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஐக்கிய தேசியக் கட்சி நடைபெறவுள்ள ஊவா மாகாணசபை மற்றும் வடக்கு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விசேடமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அபேட்சகர் தெரிவு இடம்பெறுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுமுகமான சூழ்நிலையில்லையென எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. எனவே, நாம் போட்டியிடுவதற்கும் எமது பிரசார வேலைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்குமாறு நாம் கேட்கின்றோம்.

இன்று வடக்கு பகுதிக்குச் செல்ல முடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமானது. இதனை செய்வதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்குரியதாகும்.

எனவே,  வடக்கில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதவுள்ளோம். இதேவேளை அரசாங்கம் எந்நேரத்தில் எத்தேர்தலை நடத்துமெனத் தெரியாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எத்தேர்தலையும் சந்திக்கத் தயாராகவுள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதனை எதிர்கொள்வதற்கான தீர்மானங்களை எமது செயற்குழுவினர் எடுத்துள்ளனர். இதன் ஓர் அங்கமாக கிராமிய மட்டம் முதல் அனைத்து மட்டங்களிலும் பிரசார வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

நாட்டில் 10 ஆயிரம் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும் ஒரு பிரதிநிதி என்ற விகிதத்திலும் தெரிவு செய்து இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளோம். இந்த வேலைத் திட்டத்தை 120 நாட்களில் முடிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். இத்திட்டத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *