இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக நடமாடும் வைத்தியசாலையொன்றை அமைக்க ஐ.சி.ஆர்.சி. நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊடகப் பேச்சாளர் சரசி விஜேரத்ன தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வைத்தியசாலை எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் இந்த வைத்தியசாலையில் ஐ.சி.ஆர்.சி. மருத்துவக் குழுவொன்று பணிபுரிய உள்ளது எனவும் அவர் கூறினார். இது தவிர வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும் உதவி வழங்கியுள்ளதாக கூறிய அவர் இதன் மூலம் 500 க்கும் அதிகமான படுக்கை வசதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா மெனிக்பாம் முகாமின் 3 ஆம், 4 ஆம் பிரிவுகளில் உள்ள 2350 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஐ.சி.ஆர்.சி. நேற்றும் நேற்று முன்தினமும் (27, 28) வழங்கியுள்ளது. இதில் உலர் உணவுப் பொருட்கள், உடை, சமையல் உபகரணங்கள், சிறுவர்களுக்கான பொருட்கள் என்பன அடங்குவதாக சரசி விஜேரத்ன கூறினார்.