வடக்கிலுள்ள 5 மாவட்டங்களுக்கும் துரிதமாக மின்சார வசதி வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது. இதற்காக வெளிநாட்டு உதவிகள் பெறப்படவுள்ளதோடு இது தொடர்பாக பல நாடுகளுடன் பேசி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இதே வேளை வடக்கு கிழக்கில் மோதல் காரணமாக சேதமாகியுள்ள உப மின் உற்பத்தி நிலையங்கள், மின்மாற்றிகள், மின் கோபுரங்கள் என்பனவற்றை திருத்தியமைக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.
ஈரான் உதவியுடன் வடக்கு கிழக்கிலுள்ள சில பகுதிகளுக்கு மின்சார வசதி அளிக்கப்படவுள்ளது. மீட்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி மாவட்டங்களுக்கும் மின்சார வசதியற்ற யாழ். மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் துரிதமாக மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.
மன்னார் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு மின்சார வசதிகள் வழங்கப்பட்டு வருவதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஏனைய பகுதிகளுக்கும் மின்வசதி அளிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்கு தடையின்றி மின்சார வசதி வழங்குவதற்காக சுண்ணாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.