இலங்கையை பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெறுவதற்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் கடன் வழங்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் வெற்றிபெற்றிருப்பதாக அறிவித்திருப்பதை அடுத்து நாட்டில் முன்னேற்றத்தை எதிர்பார்த்திருப்பதாக நாணய நிதியம் கூறியுள்ளது.
நாங்கள் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றகரமான கட்டத்தில் இருக்கின்றோம். நிறைவேற்று சபை நிகழ்ச்சி நிரல் தொடர்பாக எம்மிடம் திட்டவட்டமான கால அட்டவணை இல்லை. ஆயினும், எதிர்வரும் வாரங்களில் சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கரோலின் அட்ரின்சன் வாஷிங்டனில் நிருபர்களுக்கு தெரிவித்தார்.