அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசியல் நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கொண்டிருப்பதாக இலங்கை அறிவித்திருப்பதை தொடர்ந்து ஹிலாரி இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.
அதேவேளை, இலங்கையின் வடபகுதியின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் ஹிலாரி கிளின்டன் தனது கவலையை வெளிப்படுத்தியிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியை மேற்கோள்காட்டி பி.டி.ஐ. செய்திச்சேவை நேற்று தெரிவித்தது. அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் செல்வதற்கு அனுமதியளிக்குமாறும் ஹிலாரி ஜனாதிபதி ராஜபக்ஷவை கேட்டுள்ளார்.
இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 3 இலட்சம் மக்களை துரிதமாக மீளக் குடியேற்றுமாறு அமெரிக்க அதிகாரிகள் கொழும்பை வலியுறுத்தியுள்ளன. யுத்தத்திற்கு பின்னர் விடயங்களை உடனடியாக கொழும்பு எவ்வாறு கையாளுகின்றது என்பதிலேயே நாட்டின் எதிர்கால சமாதானம் தங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.