நாட்டை ஆண்ட எந்தத் தலைவர்களுக்கும் இல்லாத சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் தளராத கொள்கை, உறுதியான தரிசனத்துடன் செயற்பட்டு தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளித்த அமைச்சர், முன்னாள் தலைவர்கள் பண்டாரநாயக்க, சந்திரிகா போன்றோர் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள நேர்ந்தபோதும் கடந்த மூன்று மாதத்தில் ஜனாதிபதி சந்தித்த சவால்கள், அழுத்தங்களை எவரும் சந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது :-
தீவிரவாதத்துக்கு எதிரான இந்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றி என்பதுடன் கடந்த 35 வருடகால வன் முறை மற்றும் மிலேச்சத்தனத்திற்கு எதிராகப் பெறப்பட்ட வெற்றியாகும். இதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவிருந்து ஜனாதிபதி ஈட்டியதில் கட்சி பெருமிதமடைகிறது-
1948ற்குப் பின் வந்த சகல யுகங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ யுகமே சவால்களும் சர்வதேச அழுத்தங்களும் நிறைந்த யுகமாகும். இந்த நிலையிலும் இரண்டரை வருடங்களில் தீவிரவாதத்துக்கு எதிரான வரலாற்று வெற்றியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈட்டியுள்ளார்.
இதற்கான துணிவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய எமது அயல் நாடான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ரஷ்யா, ஜப்பான், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இதுவரை காலமும் பல சர்வதேசத் தலைவர்களையே நாம் முன்னுதாரணமாகக் கொண்டோம். இன்று மஹிந்த ராஜபக்ஷ உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.
தீவிரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்துவதில் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் செயற்பட்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, முப்படைத் தளபதிகள், தம் உயிரைத் துச்சமென மதித்து போராடிய படை வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.