![]()
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது. இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடல்களின் பொருட்டு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமைத்துவம், அடுத்து வரவிருக்கும் தலைமைத்துவம் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கின்றனர். இந்த கலந்துரையாடல்களின் போது, இலங்கையின் அரசியல், மனித உரிமைகள், மனிதாபிமான நிலைவரங்கள், வர்த்தக மற்றும் அபிவிருத்தி உதவிகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் பேசப்படவிருப்பதாக வெளிநாட்டமைச்சு வட்டாரங்கள் கூறின.
அத்துடன், இந்தக் கலந்துரையாடலானது ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய நாடுகளுடனும் வழமையாக நடத்துவது போன்றதொன்றானதும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இவ்வாறானதொரு கலந்துரையாடல் கடந்த வருடமும் நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.