இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை வழங்கப்பட விட மாட்டோம் ! தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ! பிரித்தானிய தொழிற்கட்சி சென் கந்தையா

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை வழங்கப்பட விட மாட்டோம் ! தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ! பிரித்தானிய தொழிற்கட்சி சென் கந்தையா

இம்மாதம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை பற்றிய மீளாய்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. “ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்க விடாமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அதற்கான அழுத்தங்களை வழங்குவோம்” என பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சி அரசின் முக்கியஸ்தர் சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இலங்கையின் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான தடையுத்தரவை பிரித்தானிய அரசு கொண்டுவருவதற்கு பின்னிருந்து செயற்பட்டவர் சென் கந்தையா மற்றும் அருண் கனநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜிஎஸ்பி வரிச்சலுகை தடுக்கப்பட்டால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மட்டமல்ல வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்று கேட்ட போது, தமிழ் மக்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் கூட்டுச் சேரும் அதே நேரம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகவும் கூட்டுச்சேர்ந்து ஒரே அணியில் செயற்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகரான சென் கந்தையா தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நேர்மையுடன் இல்லாததாலேயே அவர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்திருப்பதாகத் தெரிவித்தார் சென் கந்தையா. தற்போது தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்துள்ளனர் எனத் தெரிவித்த சென் கந்தையா அடுத்த நான்கு ஆண்டுகள் தமிழ் மக்களின் அரசியலில் முக்கியமான காலகட்டம் எனத் தெரிவித்தார். இதனைக் கருத்தில் எடுத்து தமிழ் கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சென் கந்தையா கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய அரசு, இராணுவத் தளபதிகளுக்கு எதிராகவும் கருணா அம்மானுக்கு எதிராகவும் தடையுத்தரவைக் கொண்டு வரும் விடயம் இலங்கை அரசுக்கு ஜனவரியிலேயே அறிவிக்கப்பட்டு இருந்தாக சென கந்தையா தெரிவித்தார். என்பிபி அரசு ஆட்சிக்கு வந்தபோதும் கடந்த காலங்களில் இருந்து மாற்றங்கள் ஏது இல்லை. இந்தத் தடையுத்தரவு இதனோடு நின்று விடப் போவதில்லை, இன்னும் பலர் இத்தடையுத்தரவுக்கு உள்ளாவார்கள் என்றும் சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அத்தோடு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வை சர்வதேசத்தின் துணையோடு தாங்கள் கொண்டுவருவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *