அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான் வீதிகளில் பாரிய ஆர்ப்பாட்டம்

w_news.jpgஅமெரிக்க இராணுவத்தை வெளியேறுமாறு ஆப்கானிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடந்தது. ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரான பராவில் சென்ற வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் பிரவேசித்த எட்டு வருடங்களில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். அமெரிக்கப் படைகள் நடாத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்காவுக்குச் சாவு, ஆக்கிரமிப்புப் படையே வெளியேறு என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாகக் கத்தினர். அரச கட்டடங்களின் ஜன்னல்கள் கதவுகளை உடைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகங்கள் சிலவற்றுக்கும் தீவைத்தனர். இவர்களை அடக்க பொலிஸார் முயன்ற போது பொலிஸார் மீது கற்கள் போத்தல்கள் பொல்லுகளை வீசினர். நிலைமை மோசமடைந்த போது பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். மூன்று பேர் சன நெரிசலில் சிக்கிக் காயமடைந்தனர். வைத்தியசாலையில் மூன்றுபேர் சிகிச்சை பெறவந்ததாக டாக்டர்கள் கூறினர்.

நேற்று முன்தினம், அமெரிக்க இராணுவம் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் யார் என்பதை சி.ஐ.ஏ.உம் ஆப்கானிஸ்தான் இராணுவமும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினர்.

147 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ள போதும் அதை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார். 20 சிறுவர்களின் பிரேதங்களை தாம் கண்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கூறினர். பொதுமக்களின் உச்சக் கட்டப் பாதுகாப்பை உறுதிசெய்ய அமெரிக்கப் படைகள் உத்தரவாதம் தந்துள்ளதாக ஜனாதிபதி ஹமித் அல் கர்ஸாயி சொன்னார்.

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட்கேட்ஸ் இது பற்றிக் கூறுகையில் தலிபான்கள் வீசிய கைக்குண்டுகளில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்று தலிபான்கள் பொதுமக்களைக் கொல்வதாகவும் ரொபேர்ட் கேட்ஸ் சொன்னார். என்றுமில்லாதவாறு ஆப்கானிஸ்தானியர்கள் ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பலியானமைக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்.

ஆக்கிரமிப்புப் படை ஆப்கானைவிட்டு வெளியேர வேண்டும். அதுவரை ஆர்ப்பாட்டங்கள் தொடருமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் பலியாவது ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஹமித் அல் கர்ஸாயிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென அவதானிகள் கூறுகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *