புல்மோட்டையில் இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் வைத்தியசாலையை உடனடியாக வவுனியாவுக்கு இடமாற்றம் செய்து அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகேயும், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய உயரதிகாரிகளும் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு திரும்பிய பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடமாடும் ஆஸ்பத்திரியை வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வரப்படுகின்ற நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கிலேயே இந்தியாவின் உதவியோடு புல்மோட்டையில் இந்த நடமாடும் ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது.
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆஸ்பத்திரி வவுனியாவில் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் பாதுகாப்பு வலயத்திலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வரப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்த நடமாடும் ஆஸ்பத்திரியை வவுனியாவுக்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதேவேளை பிரான்ஸ் நாட்டினால் வழங்கப்பட்டுள்ள நூறு கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியும் விரையில் வவுனியாவில் அமைக்கப்படவிருக்கின்றது.