ஆட்சிக்கு வந்தததும் என்.பி.பியினர் மாறி விட்டார்கள் – எம்.ஏ.சுமந்திரன்
வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், உள்ளுராட்சி சபைக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்டிருந்த சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சி எமது இனத்தின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதை நாங்கள் செய்கின்றோம். அதை நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளில் வந்து சேர வேண்டும். தமிழ் மக்களின் கைகளில் வர வேண்டும் என 75 வருடமாக உழைக்கின்ற, முயற்சி செய்கின்ற ஒரு கட்சி.
பொறுப்பு கூறல் சம்மந்தமாக பல சர்வதேச தலைவர்களுடன் பேசி, பல விதமான பொறிமுறைகள் ஊடாக அழுத்தங்களை நாம் கொடுத்திருக்கின்ற போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் காலத்தில் பேசாமல் இருந்தார்கள். 2016, 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்க பாராளுமன்றத்தில் நாம் செயற்பட்ட போது எங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். அது குறித்து பேசினார்கள். நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களை விட கூடுதலாக சொன்னார்கள்.
அந்த நிலைமைகள் 6 மாத காலத்திற்குள் தலைகீழாக மாறி விட்டது. எதிர்கட்சியில் இருந்ததைப் போல் அவர்கள் இப்போது இல்லை. வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முக்கியமானவை. அதன் சொல்லிலேயே ஒரு அடையாளம் இருக்கிறது. அது எமது கைகளில் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்” எனத் தெரிவிததார்.