பாதுகாப்பு பிரதானிகள் மீது பிரித்தானியா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு !
தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடைவிதித்துள்ளது. இராணுவ பிரதானிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமானதுடன், நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்திக்குரியததென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், முப்படைகளின் தளபதியான நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நாட்டுக்காகவே இராணுவத்தினர் யுத்தக் களத்துக்கு சென்றார்கள். எவரும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக செல்லவில்லை. ஆகவே இராணுவத்தினரை என்றும் பாதுகாக்கும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு. இவ்விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கும்,உலகத்துக்கும் அவசியமற்றது.
பிரித்தானியா விதித்துள்ள தடையில் முன்னாள் இராணுவ தளபதி இருவர் மற்றும் கடற்படைத் தளபதி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இது மிகவும் பாரதூரமானதுடன்,நாட்டின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இந்த தடையினை விதித்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். பிரித்தானியாவில் பலம் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுகிறது என்றார்.