போலி ஆவணங்களை வைத்து தையிட்டு விகாரை காணியை உரிமை கோருகின்றனர் !
யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் போலியான ஆவணங்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த எம்.பி சானக, வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பெளத்த விகாரை மற்றும் தொல்பொருள் சின்னங்களை பிரச்சினைக்குரியதாக்கி அதனூடாக அரசியல் செய்கிறார்கள். வடக்கு மாகாணத்தில் 600 இடங்கள் தொல்பொருள் மையங்களாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இடங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்து, தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இதுவரையில் உறுதியான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த விகாரை 1956 ஆம் ஆண்டு நகர திட்ட வரைபடத்தில் திஸ்ஸ விகாரை உள்ளடக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் விசேட குழுவை நியமிக்க வேண்டும். இந்த விகாரையை அண்மித்த பகுதிகளிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்ற வேண்டும். ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும்” என்றார்.
இதேவேளை, தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் அண்மையில் தெரிவித்திருந்தமையம் குறிப்பிடத்தக்கது.