மாணவர்களிடம் காட்டுத்தீயாக பரவும் சமூக விரோத செயல்கள் – சக மாணவனை தீமூட்டிய 10 வயது மாணவர்கள் !
கம்பளை பிரதேசத்தில் சக மாணவன் ஒருவனுடைய உடலில் தீமூட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 13ம் திகதி கம்பளை, யட்டபாத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஒன்றின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாடசாலை அலுவலகத்தில் இருந்த பெயிண்ட், தின்னர் என்பவற்றை திருடி கழிவறைக்குள் அவற்றைக் கலந்து தீமூட்டியுள்ளனர்.
அதில் ஒரு மாணவன் தின்னர் திரவத்தை போத்தல் ஒன்றில் அடைத்து தனது புத்தகப் பைக்குள் ஒளித்து வைத்துள்ளார். அதனைப் பற்றி பாடசாலை நிர்வாகத்திடம் இன்னொரு மாணவன் தகவல் அளித்துள்ளார். அதன்காரணமாக கோபமுற்ற சக மாணவர்கள் மூவரும் சேர்ந்து, தின்னரை போத்தல் ஒன்றில் ஊற்றி தீ மூட்டி, நிர்வாகத்திடம் தகவல் அளித்த மாணவன் மீது வீசியெறிந்துள்ளனர். இதன் போது குறித்த மாணவனின் கால்கள் இரண்டும் தீயினால் எரிந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்தவாரம் திருகோணமலை மூதூர் – தாஹா நகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேகநபரான 15 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண படம் ஒன்றுடன் இணைத்த குற்றச்சாட்டில் கண்டியிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது பொலிஸார் விசாரணை ஒன்றை முன்னெடுத்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.