அனுர ஒரு வர்க்கப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றவில்லை ! : சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்
அனுரகுமார திசநாயக்க அதிகாரத்திற்கு வந்ததை தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதை ஒரு அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றமாக கருத முடியாது என சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நூல் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. அனுரகுமார திசநாயக்க ஆட்சிக்கு வந்துள்ளதால் ஒரு வர்க்க மாற்றம் ஏற்படும் என்ற அனுமானத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கின்றது. இடதுசாரி நட்சத்திரம் என ஏகேடியை குறிப்பிட்டுள்ளார்கள்.மாவோ குறித்து ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சீன வானில் ஒரு சிவப்பு நட்சத்திரம் என குறிப்பிட்டிருந்தார். அனுரகுமார திசநாயக்க ஒரு வர்க்கரீதியான புரட்சி மூலம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றவில்லை.
அரகலயவின் போது பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும், காணாமல்போனோர் விவகாரம் உட்பட பல முற்போக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் ஊடாக ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்தது, அந்த சமூக மாற்றத்தை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.
அனுரகுமாரதிசநாயக்க தன்னை ஒரு இடதுசாரியாக எந்த மேடையிலும் அறிமுகப்படுத்தவில்லை, தேசிய மக்கள் சக்தி ஒரு இடதுசாரி கட்சி என எந்த மேடையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டினார்.